-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

என்ன செய்யப் போகிறது இந்தியதேசம்..? அப்பாவிகள் தப்புவார்களா?

ராஜீவ் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சந்திராசாமி. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் கொடி கட்டிப்பறந்த இந்த சந்திரசாமி யார்?
நரசிம்மராவின் 25 ஆண்டுகால நெருங்கிய நண்பர். இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கும் வழிகாட்டி.

சர்வதேச ஆயுதவியாபாரியான கசோக்கிக்கு மிக நெருக்கமான நண்பர். ராஜீவ் இந்திய பிரதமரான உடனேயே இந்தியாவை விட்டு வெளியேறியவர். சந்திரசாமிக்கு ராஜீவ் கொலைவழக்கில் தொடர்பு உண்டு என்று அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜ. அரசியல்வாதி ரமேஷ் தலால் என்பவர் கூறினார். அவர் " சந்திராசாமிக்கு ராஜீவ் கொலையில் முக்கிய பங்கு உண்டு.சந்திராசாமி என்னை வீட்டுக்கு அழைத்து "ராஜீவ் கொலையில் தனக்குள்ள தொடர்பை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினார்." என்று வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
"ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு முன்பே, 1991 மார்ச் மாதத்திலேயே ராஜீவ் கொலை செய்யப்படுவார். காங்கிரஸ் இரண்டாக பிளவுபடும். தேர்தலுக்கு பிறகும் சந்திரசேகர் அரசு தொடர்ந்து நீடிக்கும் என்று சந்திராசாமி என்னிடம் கூறினார். அப்போதே சந்திராசாமியின் ரகசிய நடவடிக்கைகள் பற்றி உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தேன்" என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
ஆனால் அவ்வாறான சந்திராசாமி இப்போதும் சுதந்திரமாக வெளியில்!
இது போல் இந்தியாவின் டீபார்ட்டி புகழ் சுப்பிரமணியன் சுவாமி மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சுப்பிரமணிய சாமிக்கும், சந்திராசாமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருவருமே சர்வதேச ஆயுதவியாபாரி கசோகியின் நண்பர்கள். சர்வதேச உளவு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.
சுப்பிரமணிய சாமியுடன் வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசியதை இந்திய உளவு நிறுவனம் இடைமறித்து கேட்டு, அதை கோப்புகளில் பதிவுசெய்தது. சந்திராசாமியின் நெருங்கிய நண்பனரான நரசிம்மராவ் ஆட்சியில் "மாயமாய்" மறைந்து போன ராஜீவ் கொலை சம்பந்தப்பட்ட கோப்புகளில் இந்த கோப்பும் காணாமல் போனது.
ராஜீவ் 1991 மே, 21 ம் திகதி கொலையான தகவல் வெளியுலகத்திற்கு அன்றைய இரவு 10.40 மணிக்கு தான் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலைக்கு பின், அப்போது சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த வேலுச்சாமி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் கூறியது அனைவரையும் திடுக்கிட வைத்தது." 21 ஆம் திகதி இரவு 10.25 மணிக்கு நான் சுப்ரமணிய சாமி வீட்டுக்கு தொலைபேசியில் பேசினேன். அப்போது ராஜீக் கொலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. 23 ம் திகதி அவரது திருச்சி பயணத்தை உறுதி செய்யவே நான் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், மிகசர்வ சாதாரணமாக, "ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்ற செய்தியை சொல்லத்தானே போன் செய்தீர்கள்?" என்றார். நான் அதிர்ந்து போனேன். வெளிஉலகத்திற்கு தெரியாத தகவல் இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது?
இது போல் தான் முன்னாள் தேர்தல் ஆணையாளர் டி.என்.சேஷனும். "ராஜீவ் படுகொலை செய்யப்படுவார் என்பது தனக்கு முன்கூட்டியே தெரியும்" என்று தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறார். ஆனால் இதை ராஜீவ் காந்தியின் ஜாதகத்தை அடிப்படையாக வைத்து கணித்ததாக சொல்லியிருந்தார். காஞ்சிபுரம் சங்கரமடத்துக்கும், குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கும் போய் விசேட பூசை நடத்தினால், ராஜீவ் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று இவர் யோசனையும் கூறியிருந்தார். ஆனால் உண்மையில் ராஜீவ் கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இவர் கீழ்க்கண்ட உத்தரவை அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பியிருந்தார்.
அதில் " முன்னாள், இன்னாள் பிரதமர், முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எல்லா மரியாதைகளையும், பாதுகாப்ப¬யும் தரலாம். ஆனால் அவர்கள் அரசாங்க தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவர்கள் ஒரு மாநிலத்திற்கு தனிப்பட்ட முறையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராகவோ அல்லது அரசியல் கட்சிக்காரர்களாகவோ சென்றால், பாதுகாப்பு உள்பட அரசு செய்ய வேண்டிய வசதிகளை செய்து தரக்கூடாது" இது தான் சேஷன் பிறப்பித்த உத்தரவாகும். சேஷனில் விபரீதமான இந்த உத்தரவைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து விட்டதாக 'இந்தியா டுடே' சொன்னது.
இதற்கடுத்து இந்த கொலைவழக்கில் சந்தேகம் எழுப்பிய மற்றொரு சம்பவம் ' கோடியக்கரை சண்முகம் ' தற்கொலை(!) ராஜீவ் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கோடியக்கரை சண்முகம் என்பவரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. இவர் மூலம் பல தடயங்கள் கிடைக்கக்கூடும் என்று புலனாய்வு துறை அறிவித்தது. 18.7.1991 அன்று கைது செய்யப்பட்ட சண்முகத்தை வேதாரண்யம் காவல் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் கண்காணிப்பில் வைத்திருந்தார்கள் புலனாய்வுக்குழுவினர். ஆனால் 20.7.91 அன்று அந்த மாளிகையில் உள்ள ஒரு மரத்தில் பிணமாக தொங்கினார்.
அய்யோ, என் புருஷனை கொன்னுட்டாங்களே சி.பி.ஐ புலனாய்வு குழு என்று சண்முகத்தின் மனைவி கதறினார். ஆனால் இது தற்கொலை என்றது சி.பி.ஐ. தமிழக அரசின் முன்னாள் காவல் துறை இயக்குநராக இருந்த மோகன் தாஸ், ஒரு டிவிக்கு அளித்த பேட்டியில் " சிறப்பு புலனாய்வு குழுவின் பாதுகாப்பில் இருந்த கோட்டியக்கரை சண்முகத்தின் சாவு தற்கொலையல்ல. அது திட்டமிட்ட கொலை. விசாரணைக்கு அழைத்து செல்லும் போது வெள்ளை வேட்டிக் கட்டிக் கொண்டிருந்த சண்முகம் தூக்கில் தொங்கிய போது கைலி கட்டிக் கொண்டிருந்தது எப்படி? என்று கேட்டிருந்தார்.
ராஜீவ் கொலை வழக்கு என்பது சர்வதேச சட்டங்களின் கீழ் நடத்தப்படாத முறையற்ற விசாரணை என்று சர்வதேச மனித உரிமைக்குழு ஏற்கனவே குறிப்பிட்டது. அதற்கேற்ற படியே இந்த விசாரணையிலும் எழுந்த சந்தேகங்களுக்கு பதில்கள் இல்லை.பலர் விசாரிக்கப்படவே இல்லை.
(ஆதாரம்: ராஜீவ் படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்)


உதாரணமாக கீழ்வரும் கேள்விகளுக்கு விடையில்லை.

1. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சிவராசனின் தாயாரும், காங்கிரஸ்காரரான மரகதம் சந்திரசேகரனின் மகனான லலித்சந்திரசேகரின் மனைவியான வினோதியினியின் தந்தையும் சிங்களர்கள். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். இவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாசவுக்கு ராஜீவ் மீது கோபம் இருந்தது என்பது அண்மையிலும் செய்திகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவ்வாறிக்கையில், இந்த கோணத்தில் ஏன் வினோதினி குறித்த பூர்விகம் விசாரிக்கப்படவில்லை?

2. ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூர் வருவதை வாழப்பாடி ஏற்கவில்லை. மூப்பனாரும் விரும்பவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ராஜீவ்காந்தி திருப்பெரும்புதூருக்கு கண்டிப்பாக வர ஏன் வற்புறுத்தினார்?

3. ராஜீவை கொல்ல பயன்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து ராணுவத்திடமிருந்து தான் வந்திருக்க வேண்டும். சாதாரண பேரறிவாளனும், முருகனும், சாந்தனும் அதை தயாரிக்க முடியாது. அப்படியானால், இந்த வெடிமருந்துகளை கடத்தி வந்தவர்கள் யார்?

4. ராஜீவ் கொலையானது செய்தி அறிவிக்கப்பட்டது 10.40 மணிக்கு. ஆனால் 10.30 மணிக்கெல்லாம் இது சுப்பிரமணியசுவாமிக்கு தெரிந்தது எப்படி? என்ற திருச்சி வேலுச்சாமியின் கேள்விக்கு சுப்பிரமணிய சுவாமி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டாமா..?

5. கோடியக்கரை சண்முகத்தை போல் சிவராசன், சுபா தற்கொலைகளும். இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்குள் மயக்க வாயுவை செலுத்தி உயிருடன் பிடித்திருக்க முடியும். ஆனால் புலனாய்வு துறை இவர்களை ஏன் உயிருடன் பிடிக்க முயலவில்லை?

6. பொதுவாகவே ராஜீவ் காந்தி கூட்டத்தின் போது தனியார் ஆம்புலன்ஸ் வேன் ஒன்று தயார் நிலையில் இருக்கும். ஆனால் திருப்பெரும்புதூர் கூட்டத்தின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் முன்பணம் செலுத்ததாத காரணத்தால், ஆம்புலன்ஸ் வரவில்லை என்று செய்திதாள்களில் எழுதப்பட்டன. காங்கிரஸ் கட்சிக்கு ஆம்புலன்ஸ் அழைக்க கூட பணம் இல்லையா?
பொதுவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் சிறு சந்தேகம் ஏற்பட்டாலும், அந்த சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக வழங்குவது தான் நீதிமன்றத்தின் பொதுவான நியதி. ஆனால் இந்த மரணதண்டனை தீர்ப்பில் பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு வெடிகுண்டு வெடிக்க பேட்டரி செல் வாங்கி கொடுத்தார் என்பதே. அதற்கும் கூட போலியாக பில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. எந்த பெட்டிக்கடையில் பில் போட்டு பேட்டரி தருகிறார்கள்?

மேலே கூறப்பட்ட பலத்த சந்தேகங்களை எல்லாம் விட்டு விட்டு கடைசியில் எதுவும் இயலாமல் மூன்று அப்பாவி தமிழர்கள் தூக்குமேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இருபத்தியொரு வருடங்களின் பின் இப்போது இத் தண்டனையில் காட்டப்படும் தீவிரத்துக்குக் காரணமாக மற்றுமொரு சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணைகளில் பங்கு கொண்ட சிபிஐ அதிகாரி மோகன்ராஜ். இணையத்தளத் தொலைக்காட்சிச் செவ்வியில்,அந்தச் சந்தேகத்துக்கான காரணத்தைத் தெளிவாக குறிப்பிடுகின்றார்.

விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான குமரன் பத்மநாதன் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் கைதியாக இருக்கின்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பில் பல விடயங்கள் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆகையால் அவர் விசாரிக்கப்பட வேண்டும் என்று.

விடுதலைப்புலிகள் தான் ராஜீவ் கொலைக்குக் காரணம் என அண்மையில் அவர் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்த வகையிலும், சர்வதேசத் தொடர்பாளர் என்ற வகையிலும், அவரிடம் இது தொடர்பான விசாரணைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை?.

விக்கிப்பீடியா தகவற் தளத்தில், குமரன் பத்மநாதன் பெயர் இந்த வழக்கோடு தொடர்புட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த குறிப்புக்களுக்கு மூல இணைப்பாக வழங்கப்பட்டுள்ள சிபிஐயின் குறிப்புக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இவை ஏன் மறைக்கப்படுகின்றன..?

இந்தியாவின் நேசநாடான இலங்கையின் பாதுகாப்பில், உள்ள அவரை இந்த விசாரணைக்கு உட்படுத்த இந்திய அரசு ஏன் தயங்குகின்றது..?

முன்னாள் சிபிஐ அதிகாரி மோகன்ராஜ் " மீள் விசாரணைகள் முறைப்படி மேற்கொள்ளப்பட்டால், காங்கிரஸ்காரர் பலர் இதில் குற்றவாளியாகக் காணப்படலாம் எனத் தெரிவிக்கும் கருத்துக்களை, இந்தத் தவிர்ப்புக்கள் நியாயப்படுத்துகின்றன போல் அல்லவா உள்ளது..?

இதே குற்றச்சாட்டை, இப்போது மோகன்ராஜ் மட்டும் சொல்லவில்லை. இதற்கு முன்னால், இதே தொனியில் திருச்சி வேலுச்சாமி சொல்லியுள்ளார். காலஞ்சென்ற வக்கீல் கருப்பன் சொல்லியுள்ளார். இவ்வாறு பல தடவைகள் பல தரப்புக்களிலும் வலியுறுத்தப்படும் இவ்வழக்கின் விசாரணையை, நீதி மன்ற உத்தரவு, தீர்ப்பு என்ற கோசங்களை முன் வைத்து மறுதலிப்பது ஏன்..?
இந்தியாவை காங்கிரஸ் கட்சி தான் கடந்த பல ஆண்டுகளாக ஆண்டு வருகிறது. நேரு குடும்பத்தில் பிறந்தவர்களே அந்த காங்கிரஸ் கட்சியை பிடியில் வைத்திருக்கிறார்கள். நேருவின் மகளான இந்திராவின் மகனான ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். ராஜீவ் கொலை வழக்கில் இத்தனை குழப்பங்கள், மாயமான கோப்புகள்...இத்யாதிகள். இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கிலேயே இந்த நிலை என்றால்..?

காங்கிரசுக்கு இப்போதும் ஒரு கனவு இருக்கிறது. அது எதிர்கால பிரதமராக ராகுல் காந்தி வரவேண்டும் என்பது. ஆனால் தனது தந்தையின் மரணத்தில் மறைந்திருக்கும் மர்மத்தை கூட ஒழுங்காக கண்டுபிடிக்க முடியாத, இந்த காங்கிரஸ் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற ராகுல் காந்தி தயார் என்றால், ராஜீவின் ஆத்மா காங்கிரசையும் , வாரிசுகளையும் மன்னிக்குமா..? என கோடானு கோடி இந்தியப் பிரஜைகளில் பலரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இவ்வாறு கேட்டுக் கொண்டிருப்பவர்கள் பலரும் ஏதுமில்லா ஏழைகள். அரசியற் சூதுகள் தெரியாத அப்பாவிகள்.

இவர்களது குரல்கள் ஏறுமா நீதிமன்றம் ..? ஏற்குமா.. இந்திய நீதித் துறை..? என்ன செய்யப் போகிறது காந்தியப் பெருமை பேசும் இந்தியதேசம்..?

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?