கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக தமிழக சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த கபசுர குடிநீரை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது கூட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் துறை வல்லுநர்களுடன் பிரதமர் மோடி இரு தினங்களுக்கு முன்பு, ஆலோசனை மேற்கொண்டார். அந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை தினசரி 2 முறை தலா 60 மில்லி பருக சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு எப்படி நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதோ, அதே போன்று கொரோனா தொற்றுக்கு எதிராக கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என மத்திய அரசின் ஆயுஸ் துறை, நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுர சூரணத்தை பரிந்துரை செய்துள்ளது.