ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த இந்தியா படைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது என அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 ஆயிரம் கிலோமீட்டர் பறந்து சென்று தாக்கக்கூடிய ஏவுகணையை வடிவமைத்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பல்வேறு போர் ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய திறன் வாய்ந்தது. இந்தியா அதை பரிசோதிக்க தீவிரமாக உள்ளது என செனட் குழுவினரிடம் ரொனால்டு பர்கீஸ் தகவல் அளித்துள்ளார்.
சமீபத்தில் அமெரிக்க தேசிய புலனாய்வு மையத்தின் இயக்குநர் கிளெப்பரும் இதே தகவலைத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை சுற்றி வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மாலைதீவு, இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்கெனவே சீனா தனது இராணுவ நிலைகளை வலுப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கத்வாரில் துறைமுகத்தை சீரமைத்து அங்கே தமது படைகளை நிறுத்தியுள்ளது. மாலைதீவில் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்தளத்தை அமைத்திருக்கிறது.
இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தை சீரமைத்து வலுவாக நிலை கொண்டிருக்கிறது. வங்கதேசத்தின் சிட்டகாங்க், மியான்மரின் காக்கோஸ் தீவுகளிலும் தமது கடற்படையை நிலைநிறுத்தியிருக்கிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மூளுமேயானால் எந்த சிரமுமின்றி இந்திய கடற்பரப்புக்குள் தமது படைகளை நிலை நிறுத்திக் கொள்ளும் திட்டத்தை நீண்டகாலமாகவே சீனா மேற்கொண்டு வருகிறது.