-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

புதையுண்ட தமிழீழம் மீண்டும் உயிர்த்தெழும்.....

கிறிஸ்துவுக்கு முன் (கி.பி) கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி) என்பதைப் போல் 9-11 க்கு முன் 9-11 க்குப் பின் என்று சொல்லப் பழகிவிட்டோம். நவீன வரலாற்றிக்கு இப்படியானதொரு பிளவு. இற்றைக்குச் சரியாகப் பத்து வருடங்களுக்கு முன் (2001) நியூ யோர் நகரின் உலக வர்த்தக மையம் எனப்படும் இரட்டைக் கோபுரங்கள்
தாக்கப்பட்டன.

உலகம் இதுவரை கண்டிராத தாக்குதல் முறை கையாளப்பட்டது. விமானங்களில் இருந்து கொண்டு குண்டு வீசுவார்கள், வேவு பார்ப்பார்கள், படை வீரர்களைத் தரையிறக்குவார்கள். ஆனால் அதே விமானம் பயணிகளோடு அழிவை ஏற்படுத்தும் குண்டாகப் பயன்படுத்தப் பட்டது. இது விமானத்தைக் கண்டுபிடித்த றைற் சகோதரர்கள் எதிர்பாராத பயன்பாடு.

விமானங்கள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன. அதே அமெரிக்காவில் விமானங்கள் புதிய அழிவு முறைக்குப் பயன்படுத்தப்பட்டன. இரட்டைக் கோபுர தாக்குதல்கள் பிறிதொரு நாட்டில் நடந்திருந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? இது இன்று வரை வரலாற்று ஆசிரியர்களும் அரசியல் விஞ்ஞானிகளும் கேட்கும் கேள்வி. விடை காணப்படவில்லை.

அதே போன்று இன்னொரு கேள்வி. அமெரிக்க அதிபராக ஜோர்ஜ் டபிள்யூ புஷ் என்பவருக்குப் பதிலாக வேறொருவர் இருந்திருந்தால் வரலாறு வேறு விதமாக மாறியிருக்குமா? புஷ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்கினார். எமக்கு ஆதரவானவர்கள் எமது நண்பர்கள், எமக்கு ஆதரவு தராதவர்கள் எமது எதிரிகள் என்று உலகை இரண்டாக்கினார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் (War Against Terror) என்ற பிரகடனத்தின் விளைவு பயங்கரமானது. விடுதலைப் போரை பயங்கரவாதமாக மாற்ற அது உதவியது. அரசுக்கு எதிரான எந்தவித மக்கள் எழுச்சியையும் தீவிரவாதமாகவும் அது கற்பித்தது. புதிய நாடுகளும் புதிய அரசியல் சிந்தனைகளும் உருவாவதை அது தடுத்தது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் சிறுபான்மை மக்களின் ஐநா அங்கிகரித்த சுயநிர்ணய உரிமையை மழுங்கடித்து. நாடுகள் ஒன்றிணைந்து நாடுகளாக உருவாக முயற்சிக்கும் மக்களை நசுக்கவும், இனஅழிப்புச் செய்யவும், அடிமைப்படுத்தவும் இந்த கோட்பாடு வகை செய்துள்ளது. தமிழீழம் இந்தக் கோட்பாட்டிற்கு இரையானது.

விமானங்கள் இரட்டைக் கோபுரங்களைத் தாக்கும் காட்சியைத் தொலைக் காட்சியில் மீண்டும் மீண்டும் இரவு பூராய்க் காட்டினார்கள். அந்த இரவு பத்து வருடத்திற்கு முந்தியது. இன்றும் பசுமையாக இருக்கிறது.

உலகின் திடீர் படுகொலைக் காட்சிகளில் ஒன்றான இரட்டைக் கோபுர அழிப்பில் 3,000 அப்பாவிகள் உயிரிழந்தனர். அந்தச் சோகத்திலும் பார்க்க ஈழத்தமிழர்களின் விடுதலைப்போர் சந்திக்கவிருக்கும் பின்விளைவுகள் பற்றி அந்த இருள் சூழ்ந்த இரவில் சிந்தித்தோம்.

எமது போராட்டம் 2009ல் சந்தித்த பின்னடைவுக்கும் 2001 செப்ரம்பர் 11ம் நாள் நிகழ்வுகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. சுதந்திரப் போரைத் தீவிரவாதமாக அது மாற்றியது. இருபதிற்கும் மேற்பட்ட உலக நாடுகள், அமெரிக்கா உட்பட நடத்திய தமிழீழ அழிப்பை அது நியாயப் படுத்தியது.

ஈழத் தமிழர்களுக்கு உலகம் காட்டும் ஓரவஞ்சகத்தையும் இந்த இடத்தில் நினைவு கூருகிறோம். 3,000 அப்பாவிகளின் இழப்பை ஈடுசெய்வதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அப்கானிஸ்தான், ஈராக் போர்களை நடத்துகின்றன. முள்ளிவாய்க்காலில் இரண்டு நாட்களில் 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அதற்கு என்ன பரிகாரம் கிடைத்தது.

இரட்டைக் கோபுர இடிபாடுகளில் புதையுண்ட தமிழீழம் மீண்டும் எழுச்சி பெறும். மனித உடல் அழியலாம், இலட்சியம் அழிவதில்லை. விடுதலை புலிகள் எழுப்பிய வன்னிக் கட்டிடங்களும் துயிலும் இல்லங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இரட்டைக் கோபுரங்கள் மீண்டும் எழுப்பப்படுகின்றன. எம்முடையவையும் மீண்டும் உயிர்த்தெழும்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?