-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

இந்தியாவை அழிக்க காஷ்மீர் ஒன்றே போதும்


திடீரென்று போர் வெடிக்கக் கூடிய இரு மையங்கள் உலகில் இருக்கின்றன. ஒன்று காஷ்மீர் அடுத்தது கொரியத் தீபகற்பம். காஷ்மீர் பிரச்சனை 1947ல் ஆரம்பித்து 64 வருடம் சென்றாலும் இன்று வரை தொடர்கிறது.1950ல் ஆரம்பித்த வடக்குத் தெற்கு கொரிய தீபகற்ப முறுகல் 61 வருடம் சென்றும் இற்றை வரை தொடர்கிறது.


1947ல் சுதந்திரம் வழங்கியதோடு இந்தியா பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளைப் பிரிட்டிசார் உருவாக்கினர். இந்திய உப கண்டம் முழுமையும் இருந்த 562 சிற்றரசுகள், ஜாமீன்கள், குறுநில ஆட்சிப்புலங்கள் விரும்பியவாறு இந்தியா, பாக்கிஸ்தானுடன் இணையலாம் என்று பிரிட்டிசார் ஆலோசனை கூறினர். அதன்படியே அவை இணைந்தன.

இந்தியாவோடு இணைய மறுத்த ஜதரபாத் சமஸ்தானத்தை இந்தியா ராணுவ நடவடிக்கை மூலம் தன்னோடு இணைத்துக் கொண்டது. 562 ஆள்புலங்களில் மிகப்பெரியதான காஷ்மீர் முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. இந்து மன்னரால் ஆளப்பட்டது.
மகாராஜா ஹரி சிங் என்று அழைக்கப்பட்ட அந்த மன்னரை இறுதி பிரிட்டிஸ் ஆளுநரான மவுண்பேற்றன் பிரபு ஏதோவொரு நாட்டுடன் இணையும்படி கேட்டார். மன்னர் தனித்திருக்க விரும்பினார்.


முஸ்லிம் மாநிலம் என்றபடியால் காஷ்மீர் தன்னோடு இணையும் என்று பாக்கிஸ்தான் நம்பியது. அது நடவாத போது அதைக் கைப்பற்ற ஒரு உபாயத்தைக் கையாண்டது. தனது துணைப் படைகளையும் புஷ்ருன் பழங்குடியினரையும் காஷ்மீரைத் தாக்கிக் கைப்பற்ற அது அனுப்பியது. தனது பாதுகாப்பிற்காக மகாராஜா ஹரி சிங் 25 ஒக்ரோபர் 1947ல் இந்தியாவுடன் இணையும் சாசனத்தில் ஒப்பமிட்டார்.

இந்தச் சாசனத்தை இந்தியா 27 ஒக்ரோபர் 1947ல் ஏற்றுக் கொண்டது. இந்தியாவின் காஷ்மீர் தொடர்பான உரிமைக் கோரிக்கைக்கு இந்தச் சாசனம் ஒன்று தான் அடிப்படை ஆதாரம். காஷ்மீரை இந்தியாவுக்கு விட்டுக் கொடுக்கப் பாக்கிஸ்தான் தயாரில்லை. இரு நாடுகளும் காஷ்மீருக்காக மூன்று தடவை போரிட்டுள்ளன.

முதலாவது போர் 1947 – 48ல் நடந்தது. அடுத்தவை 1965,1999 ஆகிய ஆண்டுகளில் நடந்தன. காஷ்மீர் காரணமாக இந்தியாவும் பாக்கிஸ்தானும் போர் வெறி கொண்டு நிற்கின்றன. இரு நாடுகளுக்கும் திருப்தியளிக்கும் தீர்வை எட்டினால் மாத்திரமே இரு நாடுகளுக்கும் இடையில் இயல்பு நிலை ஏற்பட வாய்ப்பு உண்டு.



1947 – 1948 போருக்கு பிறகு இரு நாடுகளும் காஷ்மீரைப் பங்கு போட்டு ஆட்சி செய்கின்றன. ஜம்முவின் பெரும்பகுதி, காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக், சியாச்செம் உறை பனிச் சிகரம் ஆகியன இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இது காஷ்மீரில் கிட்டதட்ட 43 விகிதமான பகுதியாகும்.

காஷ்மீரின் வட பகுதி கில்கிற் பல்றிஸ்தான் என்பன பாக்கிஸ்தானின் ஆட்சியில் இருக்கின்றன. விடுவிக்கப்பட்ட பகுதி என்ற அர்த்தத்தில் பாக்கிஸ்தான் அதை அசாத் காஷ்மீர் என்று அழைக்கிறது. அது முழுக்காஷ்மீரில் 37 விகிதமாகும்.

காஷ்மீரின் ஒரு பகுதியைச் சீனாவும் ஆட்சி செய்கிறது. 1962ல் இந்தியாவுடன் நடத்திய போரில் சீனா அக்சாய் சின் பகுதியை தன்னோடு இணைத்துள்ளது. தான் பிடித்து வைத்திருக்கும் அசாத் காஷ்மீரின் ஷக்சாம் பள்ளத்தாக்கை சீனாவுக்குப் பாக்கிஸ்தான் வழங்கியுள்ளது. அக்சாய் சின் சீனாவின் ஒரு பகுதி என்று சீனா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

காஷ்மீர் பிரச்சனைக்கும் தனக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று கூறிய சீனா நெடுஞ்சாலை, உலங்கு வானூர்தித் தளம் ஆகியவற்றோடு இராணுவ நிலைகளையும் அக்சாய் சின்னில் அமைத்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி காஷ்மீரின் 20 விகிதமாகும்.


இந்திய உபகண்டத்தின் வட மேற்கில் சீனா, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகள், பாக்கிஸ்தான் ஆகியவற்றை எல்லை நாடுகளாகக் கொண்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் காஷ்மிர் இருக்கிறது. உலகின் மிக உயரமான போர்நிலம் என்று சியாச்செம் உறை பனிச் சிகரம் (Siachem Glacier) போர் வல்லுநர்களால் ஏற்கப்படுகிறது. பெருஞ் செலவில் தனது படைகளை இதில் இந்தியா நிறுத்தியுள்ளது.

1947 – 48 போருக்குப் பிறகு இந்தியப் பிரதமர் நேரு காஷ்மீர் பிரச்சனையை ஜநாவுக்கு எடுத்துச் சென்றார். 21 ஏப்பிறில் 1948, இல. 47ம் தீர்மானத்தின்படி பாக்கிஸ்தான் படைகளை வெளியேறும்படியும் சிறிய படையை மாத்திரம் காஷ்மீரில் வைத்திருக்கும்படி இந்தியாவுக்கும் ஜநா உத்தரவிட்டது. அதன்பிறகு காஷ்மீரில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தும்படியும் அது இந்தியாவுக்கு உத்தரவிட்டது.

பாக்கிஸ்தான் படைகள் வெளியேற மறுத்ததால் கருத்துக்கணிப்பை இந்தியா நடத்தவில்லை. ஜநாவில் இருக்கும் தீர்க்கப்படாத மிகப் பழமை வாய்ந்த பிரச்சனையாகக் காஷ்மீர் இடம்பெறுகிறது. இதுவரை காஷ்மீர் தொடர்பாக நான்கு புதிய தீர்மானங்களை ஜநா நிறைவேற்றியுள்ளது. இரண்டு இராணுவங்களையும் சமகாலத்தில் வெளியேறும்படி ஒரு தீர்மானம் கூறுகிறது.

இந்தியா அதற்குச் சம்மதிக்கவில்லை. 1971ல் வங்காளதேசம் இந்தியத் தலையீட்டால் உருவான பிறகு இந்திய பாக்கிஸ்தான் தலைவர்கள் 1972ல் சிம்லா ஒப்பந்தத்தைச் செய்தனர். பிரதமர் இந்திரா காந்தி, பாக்கிஸ்தான் பிரதமர் சுல்பிக்கார் அலி புட்டோ ஆகியோர் இரு நாடுகளும் பிடித்து வைத்திருக்கும் பகுதிகளைப் பிரிக்கும் எல்லைக் கோட்டை (Line OF Control) ஆங்கீகரித்தனர்.

1999ல் கார்கில் போர் மூலம் பாக்கிஸ்தான் இதை மாற்ற எத்தனித்தாலும் இரு தலைவர்களும் உருவாக்கிய கோடு நிலைத்து நிற்கிறது. மிக நெருக்கமாக இராணுவ மயப்படுத்தப்பட்ட பிரதேசம் என்று காஷ்மீர் வர்ணிக்கப்படுகிறது. இந்தியா ஜந்து இலட்சம் துருப்புக்கள், துணைப் படைகள், புலனாய்வாளர்களைக் காஷ்மீரில் நிறுத்தியுள்ளது. இந்தியாவின் ஆழந் தெரியாத கருங்குழி என்று காஷ்மீர்பற்றிக் கூறப்படுகிறது.

உலகிற்கு உபதேசம் செய்யும் இந்தியாவால் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியவில்லை. ஒப்பீட்டில் சிறியதான பாக்கிஸ்தான் சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்குச் சவால்விடும் வசதியை காஷ்மீர் ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் அணு ஆயுததாரிகளான படியால் பரஸ்பர அழிவும் உலக அமைதிச் சீர்குலைவும் நிட்சயம் வரவிருக்கிறது.

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடும் என்ற கணக்கில் இந்தியத் தலைவர்கள் காஷ்மீர் பிரச்சனையைத் தட்டிக் கழிக்கிறார்கள். இந்திய ஆட்சிக்குட்பட்ட தன்னாட்சி உரித்தைத் தருவதாக 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். அதற்குமேல் ஒன்றும் நடைபெறவில்லை. இராணுவத் தீர்வைத் தான் இந்தியா நம்பியிருக்கிறது.

1989ம் ஆண்டு தொடக்கம் காஷ்மீர் மக்கள் விடுதலைப் போர் தொடுத்துள்ளனர். இன்திபாடா என்ற அமைதிப் போரட்டத்தை இந்திய இராணுவம் மிகக் கொடிய விதத்தில் நசுக்கியுள்ளது. இது வரையில் 84,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பாகப்பிரிவினைப் போர் இன்று இந்து- முஸ்லிம் மதப் போராக மாறிச் சர்வதேச மயமாகியுள்ளது. வெளிநாட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் மதப் போர் புரிய பாக்கிஸ்தான் ஊடாகக் காஷ்மீருக்குள் நுளைகின்றனர். எல்லையில் நிறுத்தப்பட்ட 200,000 இந்தியப் படையினரையும் தாண்டி வருகின்றனர். பாக்கிஸ்தானும் ஊடுருவலுக்கு உதவுகிறது. பயிற்சி வசதியை வழங்குகிறது.

இந்திய இராணுவத்தின் அராஜகம் உலகின் கவனத்தை முழு அளவில் பெறவில்லை. இராணுவத்தினர் வீடு வீடாக நடத்தும் பாலியல் வன்முறை காரணமாகப் பெண்கள் தான் கூடுதலாகச் சீரழிகிறார்கள் என்று எம் எஸ் எப் அறிக்கை கூறுகிறது. காஷ்மீரில் காணமற் போதல்கள்,சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் அதிகரித்துள்ளதாக அம்னெஸ்ரி குற்றஞ்சாட்டுகிறது.

காஷ்மீரில் மனிதப் புதைகுழிகளின் எண்ணிக்கையை மதிப்பிட முடியாதென்றும் இராணுவ மனித உரிமை மீறல்கள் எல்லை கடந்து விட்டன என்றும் மனித உரிமைக் காப்பக அறிக்கை கூறுகிறது. ஒரு படையாள் கொல்லப்பட்டதற்காக இந்திய இராணுவம் நடத்திய பதிலடிப் படுகொலைகளை ஜனவரி 1993 ரைம் சஞ்சிகை விவரிக்கிறது.

ஒவ்வொரு நாழும் காஷ்மீர் மக்கள் நரக வேதனையை அனுபவிக்கிறார்கள். இராணுவக் கெடுபிடிகளையும் தீடீர் மரணத்தையும் நாளாந்திரம் சந்திக்கின்றனர். வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்குப் பிடியில் கழிக்கின்றனர். காஷ்மீர் இளவயதினர் சிறு வயதில் இருந்து அசாதாரண வாழ்வுக்குப் பழகி விட்டனர்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் எனப்படும் இந்தியாவில் அரச பயங்கரவாதம் நிரந்தரமாகியுள்ளது. பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தில்(Public Security Act) நீதி விசாரணை இன்றி அதிக பட்சம் இரண்டு வருடம் தடுத்து வைக்க முடியும். காஷ்மீரில் 20,000 மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அம்னெஸ்ரி கூறுகிறது.

(The Challenge In Kashmir, Democracy Self – Determination and A Just peace Prof Sunantra Bose, Sage. 1997)

மகாத்மா காந்தி காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்று இந்திய மக்கள் கோஷமிட்டனர். இப்போது காஷ்மீர் மக்கள் இந்தியனே வெளியேறு என்று ஓலமிடுகின்றனர். ஜநா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை கோரும் இந்தியா தனது சுயபாதுகாப்பிற்காகக் காஷ்மீருக்குத் தீர்வு காண வேண்டும்.

http://www.tamilkath...58//d,view.aspx



Edited by komagan 
Ref: www.yal.com 

நாம் என்னத்தை திரும்பத்திரும்ப செய்கிறோமோ அதுவே நாமாக ஆகிவிடுகிறோம். சிறப்பு என்பது செயலில் இல்லை, பழக்கத்தில் இருக்கிறது - அரிஸ்டாட்டில்

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?