மர்மக் கப்பல் ஒன்று இந்தியக் கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டு நிற்பதை மிகக் கவனமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன உளவுத்துறைகள். கடந்த ஒரு மாத காலமாக இந்தக் கப்பல் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் சிறுசிறு படகுகள் கப்பலருகே போவதும்
வருவதுமாக உள்ளன. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதே மர்மமாக உள்ளது.
வருவதுமாக உள்ளன. இவர்கள் என்னதான் செய்கிறார்கள் என்பதே மர்மமாக உள்ளது.
கேரளாவின் கரையோரமாக, இந்திய கடல் எல்லைக்கு வெளியே கப்பல் நிற்பதால், நம்ம கடற்படையால் கப்பலை சோதனையிட முடியாது. ஏன் நிற்கின்றது என்று கேள்வி எழுப்பவும் முடியாது. கொள்ளையர்கள் கப்பல் என்று அதிரடியாகச் சோதனையிடவும் முடியாதபடி, கப்பல் ஈரான் அரசுக்கு சொந்தமானது!
கப்பலின் பெயர் எம்.வி.அசா. கேரளாவின் கரையில் இருந்து இந்தியக் கடல் எல்லை முடியும் இடத்திலிருந்து சற்று அப்பால் இந்தக் கப்பல் வந்து நின்றதில் இருந்து இன்றுவரை, இந்திய கடற்படை அதிகாரிகளுடன் எவ்வித தொடர்பையும் ஏற்படுத்த கப்பல் முயலவில்லை. கப்பல் பழுது காரணமாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்தால், அருகிலுள்ள நாடான இந்தியாவை தொடர்பு கொண்டு உதவி கோரியிருக்கும்.
கப்பலுக்கு வந்து செல்லும் படகுகள்கூட சர்வதேச கடல் பகுதியில் நடமாடுவதால், இந்தியக் கடற்படை ரோந்துப் படகுகளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியக் கடல் எல்லை கரையில் இருந்து கடலுக்குள் 12 கடல் மைல்கள் (nautical miles) வரை உள்ளது. இதற்குள் வரும் எந்தக் கப்பலும் இந்திய அனுமதியுடன் வந்தேயாக வேண்டும். அல்லது, எந்தக் கப்பலையும் சோதனையிட சர்வதேச கடல் சட்டத்தின்படி இந்தியாவுக்கு பூரண உரிமை உள்ளது.
12 கடல் மைல்களுக்கு அப்பால் மேலும் 200 கடல் மைல்கள் வரை இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார கடல்பகுதி (Exclusive Economic Zone – EEZ) என்று அழைக்கப்படும். இந்தக் கடல் பகுதியும் இந்தியாவுக்கு சொந்தமானதுதான். EEZ-ன் அர்த்தம் என்னவென்றால், இதற்குள் உள்ள கடல் வளங்கள் அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தம். ஆனால், இந்தப் பகுதிக்குள் நடமாடும் வர்த்தகக் கப்பல்களை இந்தியா ஏதும் செய்ய முடியாது என்பதே சர்வதேச கடல் சட்டம்.
லாயிட்ஸ் ஷிப்பிங் வெசல்ஸ் ரிக்கார்டில் இருந்து எம்.வி.அசா என்ற பெயருடைய கப்பல், Islamic Republic of Iran Shipping Lines (IRISL) என்ற ஈரான் அரசு நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. அதற்குமேல் எந்த விபரமும் கிடையாது.
கடந்த மே மாதத்தில் சீன நியூஸ் ஏஜென்சி ஸின்குவா ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. ஈரானுக்கு சொந்தமான அசா என்ற கப்பல், ஏமன் கடற்படையால் அவர்களது கடல் பகுதியில் இருந்து துரத்தப்பட்டது என்பதே அந்தச் செய்தி.
“ஏமனின் லாஹ்ஜ் துறைமுகத்துக்கு அருகே இந்தக் கப்பல் வந்தபோது, ஏமன் அதிகாரிகள் கப்பல் பற்றிய விபரங்களை விசாரித்திருந்தனர். ஆனால் கப்பல் கேப்டன் எந்த விபரத்தையும் கொடுக்கவில்லை. அதையடுத்து சந்தேகம் கொண்ட ஏமன் கடற்படை தமது பீரங்கிப் படகுகளை இந்தக் கப்பலை நோக்கிச் செலுத்தி, அசா கப்பலை அங்கிருந்து வெளியே துரத்தின” என்பதே அந்தச் செய்தி.
அதே கப்பல் இப்போது, இந்தியக் கடற்படையால் துரத்த முடியாதபடி, கடல் எல்லைக்கு வெளியே நங்கூரமிட்டு நிற்கிறது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற மர்மம் நீடிக்கிறது!